தாளவாடி மலைப்பகுதி அருகே தாயுடன் கள்ளத்தொடர்பில் இருந்த விவசாயியை சுத்தியால் அடித்து கொலை செய்து வீசிய வாலிபர் உள்பட 3 பேர் கைது.
ஈரோடு மாவட்டம், அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டபுரம் கிராமத்தை ஒட்டி அடர்ந்த வனப்பகுதியில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி வனத்துறையினர் ரோந்து பணியை மேற்கொண்ட போது மனித எலும்புக்கூடு கிடந்ததை பார்த்தனர்.

உடனடியாக ஆசனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து எலும்புக்கூட்டினை கைப்பற்றி ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனை கண்ட மருத்துவர்கள் எலும்புக்கூட்டை ஆய்வு செய்ததில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடலின் எலும்புக்கூடு என்பது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்போது எலும்புக்கூடாக கிடந்தது தொட்டபுரத்தை சேர்ந்த விவசாயி குமார் (40) என்பதும், கடந்த மே 26 ஆம் தேதி முதல் காணாமல் போனதும், அவரை அதே ஊரை சேர்ந்த நாகமல்லு (26), முத்துமணி (43), மாதேவன் (25) ஆகிய 3 பேரும் சேர்ந்து சுத்தியால் அடித்து கொலை செய்து வனப்பகுதியில் வீசியதும் தெரியவந்தது.

அதை தொடர்ந்து போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். அதில், குமாருக்கும், முத்துமணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதை முத்துமணியின் மகன் நாகமல்லு அறிந்து குமாரை கண்டித்ததாக தெரிகிறது. இருப்பினும் தொடர்ந்து இருவரும் கள்ளத்தொடர்பில் இருந்தனர்.
கடந்த மே 26 ஆம் தேதி முத்துமணியுடன் குமார் தனது வீட்டில் இருப்பதை நாகமல்லு பார்த்தார். இதனால் ஆத்திரம் அடைந்த குமார், உறவினர் மாதேவனை வரவழைத்து, இருவரும் சேர்ந்து சுத்தியலால் குமாரின் தலையில் தாக்கினர். அதில் ரத்த வெள்ளத்தில் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை அடுத்து நாகமல்லு, முத்துமணி, மாதேவன் ஆகிய 3 பேரும் சேர்ந்து குமாரின் உடலை இரவோடு இரவாக அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று வீசியுள்ளனர்.
அதை தொடர்ந்து போலீசார் கொலை வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தாளவாடி மலைப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Leave a Reply
You must be logged in to post a comment.