இளநிலை மருத்துவ சேர்க்கைக்கான நடப்பாண்டு நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நடத்தப்பட்டு, ஜூன் 4 ஆம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதில் வினாத்தாள் கசிவு, ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றது, கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.

இந்த விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் தலைவரை பதவி நீக்கம் செய்து, உத்தரவிட்ட ஒன்றிய அரசு, நீட் தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சிபிஐ விசாரணை நடத்தி பலரை கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் வரும் 8 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று குஜராத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில், நடந்து முடிந்த நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய முடியாது. முறைகேடுகள் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீட் தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்தால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அதனை முழுமையாக ரத்து செய்வது நியாயமானதாக இருக்காது.
நீட் தேர்வுகள் வௌிப்படைத் தன்மையுடனும், நியாயமாகவும் நடைபெற புதிய சட்டத்தை இயற்றி உள்ளோம். தேர்வுகளை திறம்பட நடத்த பரிந்துரைகளை அளிக்க உயர் மட்ட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.