நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுப் பணியாளர் மற்றும் பாதுகாவலர் ஜாமீன் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில், விசாரணைக்கு ஆஜராகக் கூறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பினர்.
சீமான் வீட்டு கதவில் ஒட்டப்பட்ட இந்த சம்மனை கிழித்ததாக, அவரது பணியாளர் சுபாகர் மற்றும் பாதுகாவலர் அமல்ராஜ் ஆகியோரை நீலாங்கரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபாகர், அமல்ராஜ் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில் அரசியல் உள்நோக்கில் தங்கள் கைது செய்யபட்டுள்ளதாகவும், காவல்துறை கூறிய குற்றச்சாட்டு அனைத்தும் தவறனானது. துப்பாக்கி உரிய அனுமதி இருப்பதால், ஆயுத தடுப்பு சட்ட பிரிவில் கைது செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர்.
இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,காவல்துறை சார்பில் ஆஜரான அருள் செல்வம், மனு குறித்து பதிலளிப்பதற்காக வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர், காவல்துறையின் இயலாமை காரணமாகவே வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்க கோருவதாக குற்றம்சாட்டினார். மேலும், வழக்கை நாளைக்கு விசாரணைக்கு எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து, மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.