ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தேடப்படும் நபரான நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே. சுரேஷுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறி சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து 2438 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் பொருளாதாரக் குற்ற தடுப்பு பிரிவு அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் உட்பட 40 பேர் மீது வழக்கு பதிவு செய்து அதில் 22 பேருக்கு கைது செய்து அவர்கள் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதிக வட்டி தருவதாக கூறி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து 2438 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி திரைத்துறையை சேர்ந்த மாநில பாஜக ஓ.பி.சி பிரிவு துணைத் தலைவரான ஆர்.கே சுரேஷுக்கு பொருளாதார குற்ற பிரிவு சம்மன் அனுப்பியது.

அதன்படி ஆஜராகாததால் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பித்தனர். இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.கே சுரேஷ் மனு தாக்கல் செய்தார். அதில் ஆருத்ரா மோசடிக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. மனைவி மற்றும் குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக துபாயில் இருக்கிறேன். நாடு திரும்பினால் கைது செய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் லுக் அவுட் நோட்டீசை நிறுத்தி வைத்ததுடன் சென்னை திரும்பி விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தது. அதன்படி டிசம்பர் 10ஆம் தேதி சென்னை திரும்பிய ஆர்.கே சுரேஷ் 12 மற்றும் 13 தேதிகளில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரி முன்பு விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் லுக் அவுட் நோட்டீசை எதிர்த்து வழக்கு நீதிபதி ஜி. ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த போது காவல்துறை தரப்பில் ஆர்.கே சுரேஷ் அளித்த வாக்குமூலம் ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து வருவதாகவும், விசாரணைக்கு தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் அழைக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆர்.கே சுரேஷ்க்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்த நீதிபதி மீண்டும் விசாரணை தேவைப்பட்டால் புதிதாக சம்மன் அனுப்பும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.