முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி. திமுகவில் இருந்த போது தென் மண்டல அமைப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மதுரையில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார். 2014ஆம் ஆண்டு திமுக தலைமை இடையே ஏற்பட்ட மோதலில் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.

சென்னை போயஸ் கார்டனிலுள்ள வீட்டில் வசித்துவந்த தயாநிதிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி திடீரென மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவரது வீட்டிலிருந்தவர்கள் அவரை மீட்டு, அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையிலுள்ள ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதை உறுதிசெய்ததோடு, உடனடியாக சிகிச்சையைத் தொடங்கியிருக்கின்றனர். சுமார் ஆறு மணி நேரத்துக்கும் மேல் சிகிச்சை நடைபெற்றதையடுத்து, அவரை பொது வார்டுக்கு மாற்றினர். மகனின் உடல் நலம் குறித்து அறிந்த உடன் முன்னாள் அமைச்சர் அழகிரியும், அவரின் மனைவியும் டிசம்பர் 7ஆம் தேதிதான் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்தனர். தனது அப்பாவுக்கும் சித்தப்பா ஸ்டாலினுக்கும் இடையே மனக்கசப்பு இருப்பினும் கூட, உதயநிதி உள்ளிட்ட குடும்ப உறவினர்களோடு தொடர்ந்து நல்லுறவை பேணி வந்தவர் துரை தயாநிதி. அதனால்தான் மருத்துவமனைக்கு நேரில் வந்து அண்ணன் அழகிரிக்கு ஆறுதல் கூறினார் முதல்வர் ஸ்டாலின்.

கருணாநிதியின் மொத்த குடும்பமும் அப்பல்லோவில் ஒன்று கூடி அழகிரிக்கு ஆறுதல் கூறினார்கள். மகனின் உடல் நிலை அழகிரியை நிலை குலைய வைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30ஆம் தேதி அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவார்கள் அவரது ஆதரவாளர்கள். இந்த ஆண்டு துரை தயாநிதியின் உடல் நல பிரச்சினை காரணமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்து விட்டனர். மதுரையில் போஸ்டர்கள் எதுவும் ஒட்டப்படவில்லை. துரை தயாநிதி தற்போது சென்னையில் செட்டிலாகிவிட்டாலும் கூட அவரை இன்னும் மதுரை அரசியலில் இருந்து அவரது தந்தையின் ஆதரவாளர்கள் விடுவதாக இல்லை.
வரும் மக்களவை தேர்தலில் துரை தயாநிதியை மதுரை மக்களவை தொகுதியில் களமிறக்க வேண்டும் என்ற ஆசையையும் அழகிரி ஆதரவாளர்கள் கடந்த ஆண்டு முதலே போஸ்டர் மூலமாக வெளிப்படுத்தி வந்தனர். இந்த சூழ்நிலையில்தான் கடந்த டிசம்பர் 6ஆம் தேதியன்று துரை தயாநிதியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 3 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார் துரை தயாநிதி. இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதியை வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதித்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.