தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கேரளாவில் கைது செய்தனர். அவரை கரூருக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கரூரில் 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் கொடுத்து பத்திரப்பதிவு செய்ததாக யுவராஜ், பிரவீன் உள்ளிட்ட 7 பேர் மீது, கரூர் நகர காவல் நிலையத்தில் மேலக்கரூர் சார்பதிவாளர்(பொ) முகமது அப்துல் காதர் கடந்த மாதம் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து பின்னர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என கருதி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானார்.
இதற்கிடையே, ரூ.100 கோடி மதிப்புடைய 22 ஏக்கர் நிலத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பினர் மிரட்டி பத்திரப்பதிவு செய்துள்ளதாக, சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் ஷோபனாவின் தந்தை பிரகாஷ், வாங்கல் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீன் உள்ளிட்ட 13 பேர் மீது வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், கரூர், சென்னையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள்,
ஆதரவாளர்களின் வீடுகள், நிறுவனங்களில் சிபிசிஐடி போலீஸார் கடந்த 5, 7, 11 ஆம் தேதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, விஜயபாஸ்கரின் மனைவி விஜயலட்சுமியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுக்கள் ஏற்கெனவே 2 முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தங்களுக்கு முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், கடந்த 5 வாரங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகியோரை கேரள மாநிலம் திருச்சூரில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

பின்னர், அவர்களை கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடிஅலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் சிபிசிஐடி அலுவலகம் முன்பு குவிந்தனர்.
இதனால், போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. சுமார் 7 மணி நேர விசாரணைக்குப் பிறகு நேற்று இரவு 9 மணி அளவில் விஜயபாஸ்கரை மருத்துவப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.