க்ரூப் டான்ஸராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியவர் லாரன்ஸ்.இதனையடுத்து சில பாடல்களில் தோன்றி நடனம் ஆடிய லாரன்ஸ் அற்புதம் படம் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். தொடர்ந்து 2004ஆம் ஆண்டு மாஸ் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தமிழில் முனி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனையடுத்து காஞ்சனா சீரிஸை இயக்கிய அவருக்கு காஞ்சனாவும், காஞ்சனா 2வும் மெகா ஹிட்டை கொடுத்தது.
நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்குநர் கதிரேசன் இயக்கியுள்ள ’ருத்ரன்’ திரைப்படத்தின் இந்தி மற்றும் பிற வடஇந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனம் பெறுவது தொடர்பாக, ருத்ரன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது.

12 கோடியே 25 லட்சம் ரூபாய்ச் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்த ரெவன்ஸா நிறுவனம் முதற்கட்டமாக 10 கோடி ரூபாய்ச் செலுத்தியிருந்தது. இந்நிலையில் 4 கோடியே 50 லட்சம் ரூபாய்க் கூடுதலாகச் செலுத்த வேண்டும், எனக் கூறிய தயாரிப்பு நிறுவனம் திடீரென இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
இதுதொடர்பாக மத்தியஸ்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், ஏப்ரல் 14ம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும், திட்டமிட்டபடி படத்தை வெளியிட அனுமதித்தால், தங்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என, ரெவன்ஸா குளோபல் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி படத்தை ஏப்ரல் 24 ஆம் தேதி வரை வெளியிட இடைக்காலத் தடை விதித்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். தடையை நீக்க வேண்டும் என்று நீதிபதி முன்பு ராகவா லாரன்ஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி வழக்கை நாளை (ஏப்ரல் 13) விசாரிப்பதாகத் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.