திரிஷா குறித்து சர்ச்சையாக பேசியிருந்த நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் முன்பு நடிகர் மன்சூர் அலிகான் ஆஜராகி விளக்கம் அளித்தார். திரிஷாவை மிகவும் மதிப்பதாகவும் தெரிவித்தார். நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நடிகை திரிஷா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். திரிஷாவை தொடர்ந்து குஷ்பூ உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதுபோல மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் அவர் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார் என தென்னிந்திய நடிகர் சங்கமும் எச்சரிக்கை விடுத்தது. இதற்கிடையே மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் அணையம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ஏற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை போலீஸ் கமிஷனர் சந்திப்ராய் ரத்தோருக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சர்ச்சை பேச்சு குறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராககோரி மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் வழங்கினார். இந்த சம்மனை ஏற்று நடிகர் மன்சூர் அலிகான் நேற்று காலை 10 மணிக்கு முதலில் ஆஜர் ஆவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தொடர் இரும்பல் மற்றும் குரல்வளை பாதிப்பு காரணமாக விசாரணைக்கு 24ஆம் தேதி ஆஜராக அனுமதிக்குமாறு மன்சூர் அலிகான் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசருக்கு கடிதம் அனுப்பினார்.
இந்த நிலையில் நேற்று மதியம் 2:45 மணி அளவில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மன்சூர் அலிகான் நேரில் வந்தார். அப்போது போலீஸ் நிலையத்தின் வாசல்களை மூடி வக்கீல் இல்லாமல் மன்சூர் அலிகானை மட்டும் உள்ளே அனுமதித்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி முன்பே மன்சூர் அலிகான் ஆஜர் ஆனார். அவரிடம் நடிகை திரிஷா குறித்து பேசிய வீடியோவை காண்பித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், நான் பேசிய தவறாக சித்தரிக்கப்பட்டு விட்டது. எனது பேச்சில் எந்த உள் அர்த்தமும் இல்லை. நடிகை திரிஷாவை பற்றி நான் தவறாக பேசவில்லை. அதற்காக அவர் வருத்தப்பட்டிருந்தால் அதற்காக நானும் மனம் வருத்தம் அடைகிறேன் என தனது வாக்குமூலத்தில் மன்சூர் அலிகான் கூறியதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த வழக்கில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், வாக்குமூலத்தில் அவர் தெரிவித்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இவற்றை இன்ஸ்பெக்டர் தனலட்சுமி உடன் எழுத்துப்பூர்வமாக மன்சூர் அலிகான் கொடுத்துள்ளார். சுமார் 35 நிமிடம் அவரிடம் விசாராணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு ஆஜரான பின்னர், நடிகர் மன்சூர் அலிகான் நிருபர்களிடம் கூறுகையில்; போலீசாரின் விசாரணையில் நடந்தவற்றைக் கூறியுள்ளேன். நான் தனிப்பட்ட திரிஷா கிருஷ்ணனை விமர்சிக்கவில்லை. ஒரு நடிகையாக அவரை நான் மிகவும் மதிக்கிறேன் எனவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளேன் எனக் கூறினார். மன்சூர் அலிகானிடம் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில் ஓரிரு நாட்களில் நடிகை திரிஷாவுக்கு சம்மன் அனுப்பி அவரிடமும் விசாரணை நடத்த ஆயிரம் விளக்கு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.