திருச்சி சூர்யா, கடந்த 2022 ஆம் ஆண்டு பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சியிடம் செல்போனில் ஆபாசமாக பேசியதாக நவம்பர் 2022-ல் இருந்து 6 மாதம் நீக்கப்பட்டார். சில மாதங்களுக்கு பிறகு கட்சியில் இணைக்கப்பட்ட அவருக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இதை அடுத்து, முன்னாள் மாநில தலைவர் தமிழிசை, அண்ணாமலை தலைவரான பிறகு தான் ரவுடிகள் கட்சியில் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழிசை தெரிவித்தற்கு பதில் அளித்து திருச்சி சூர்யா,

குற்ற பின்னணி உள்ளவர்கள் பாஜகவில் சேர்க்கப்பட்டது தமிழிசை பரிந்துரையில் மாநில தலைவர் ஆக்கப்பட்ட எல்.முருகன் காலகட்டத்தில் தான். கட்சியின் வளர்ச்சியையும், தனி நபருக்கு கிடைக்கும் புகழையும் ஏற்க முடியாமல் இப்படி புலம்புகிறீர்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது என்று கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதேபோல் அண்ணாமலை மீது குற்றம்சாட்டிய பாஜக சிந்தனையாளர் பிரிவு மாநில செயலாளர் கல்யாணராமனும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதை அடுத்து திருச்சி சூர்யா தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் வௌியிட்டுள்ள பதிவில்;-

அண்ணாமலைக்காகத்தான் பதில் அளித்தேன். அதற்காக என் மேல் நடவடிக்கை என்றால் மகிழ்ச்சி. இனி பாஜகவில் பயணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. சுயமரியாதை முக்கியம். எதன் பொருட்டும் அதை கைவிட முடியாது என தெரிவித்தார்.
இந்த நிலையில், திருச்சி சூர்யா வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:- பாஜக மையக் குழுவில் கட்சி தலைமையும் தலைவர்களையும் விமர்சித்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று என்னையும் கல்யாணராமனையும் நீக்கினீர்கள்.

நியாயம் ஏற்றுக் கொள்கிறேன். இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியாக இருந்து கட்சியில் ரவுடிகள் இருக்கிறார்கள் என்றும், அதிமுகவுடனான கூட்டணியை கெடுத்து வெற்றியை தடுத்து விட்டார் என்றும், மாநிலத் தலைவரின் செயல்பாட்டையும் விமர்சனம் செய்த தமிழிசை மேல் நடவடிக்கை ஏன் இல்லை? நாடார் என்பதாலா?
தமிழிசை சொன்னதை உண்மை என்று இந்திய தேசிய பாஜக தலைமை கருதி இருந்தால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்கு தடையாக இருந்தது எது கவுண்டர் லாபியா?

தமிழ்நாட்டில் பாஜக நாற்பது இடங்களில் தோற்றதற்கு வீட்டு வாசலில் வெடி வெடித்து கொண்டாடிய, திமுகவின் கலைஞர் 100 நிகழ்ச்சியில் மேடை ஏறி உரையாற்றிய எஸ்.வி.சேகர் இன்னும் பாஜக உறுப்பினராக இருக்கிறார்.
ஏன் அவர் மீது நடவடிக்கை இல்லை? பிராமணர் என்பதாலா? சாதி படிநிலை அடிப்படையில் தான் நடவடிக்கை பாயுமா? எல்லோரும் இந்து என்று மேடையில் ஒப்புக்கு சொல்லி விட்டு, சாதி லாபிகளுக்கு அடிபணிந்து அப்பட்டமாக அம்பலப்பட்டிருக்கிறது. இவ்வாறு கடுமையாக விமர்சித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.