தூத்துக்குடி, துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கையின் அடிப்படையில் 21 அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்த போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது காவல்துறையினர் மே 22 ஆம் தேதி துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கை மற்றும் தமிழ்நாடு அரசு அளித்த அறிக்கை அடிப்படையில் இந்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது. இதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி தீபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்குத் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் மாலா அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் ஆர். சண்முகசுந்தரம் ஆஜராகி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து வாதிட்டார். அவர் வாதிடும் போது நீதிபதி அருணா ஜெகதீசன் ஆலயம் அளித்த அறிக்கை அரசு ஏற்று கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டராக இருந்த வி. வெங்கடேஷ் தென்மண்டல ஐ.ஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ் துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ பதிவு செய்துள்ள வழக்கின் நிலை என்ன ஒரு காவல்துறை அதிகாரி மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. மற்ற காவல் துறையினருக்கு எதிராக வழக்கு கைவிடப்பட்டது, என்று கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக விளக்கம் அளிக்க சி.பி.ஐ தரப்பு வழக்கறிஞரையும் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞரையும் அடுத்த விசாரணையின் போது ஆஜராக சொல்வதாக அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் இன்னும் பணியில் நீடிக்கிறார்களா அல்லது ஓய்வு பெற்று விட்டார்களா என்பது தெரியவில்லை.

அரசு தரப்பு தாக்கல் செய்த அறிக்கையில் இடம் பெற்று இருந்த காவல்துறை அதிகாரி சைலேஷ் குமார் யாதவ் ஏற்கனவே உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர்கள் பிரச்சனை ஏற்பட்ட போது திறமையாக கையாண்டு நீதிமன்றம் சுமுகமாக செயல்பட செய்தவர். அவர் எப்படி இந்த குற்றச்சாட்டுகள் ஆளானார் என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து தற்போது நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள 21 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன துப்பாக்கி சூடு சம்பவத்தில் அவர்களின் பங்கு என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை டிசம்பர் 11ஆம் தேதி தள்ளி வைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.