முடக்கப்பட்ட தனது அஞ்சலக கணக்குகளை விடுவிக்க, இணையதளம் மூலம் போலியாக நீதிமன்ற ஆணை தயாரித்து போலீசாருக்கு அனுப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்தவர் சையது கலீல் மகன் சுமல் பாபு வயது (22). இவரது பெரியம்மா இந்திரா என்பவர் சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றபோது அவருக்கு ரூ.38 லட்சம் பணப்பலன்கள் கிடைத்துள்ளது. இதை இந்திரா தனது வங்கி கணக்கில் வைத்திருந்தார். இதை பார்த்த கமல் பாபு, ஆன்லைன் மூலம் தனது பெயரில் தபால் தேம்ப நிலையத்தில் பல்வேறு கணக்குகள் தொடங்கி, அந்த கணக்குகளுக்கு தனது பெரியம்மா வங்கி கணக்கில் இருந்து ரூ.38 லட்சத்தையும் மாற்றம் செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த இந்திரா அளித்த புகாரின் பேரில், கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், கமல்பாபுவின் தபால் நிலைய கணக்குகளை முடக்கி வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது தனது கணக்குகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கமல்பாபு பலமுறை போலீசாருக்கு கடிதம் எழுதி உள்ளார். இருப்பினும் விசாரணை முடிவடையாததால் போலீசார் கணக்குகளை முடக்கியே வைத்திருந்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்கு, கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ஒரு தபால் வந்தது.

அந்த கடிதத்தில் கமல்பாபுவின் வங்கி கணக்குகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவை, சந்தேகத்தின் பேரில் உண்மை தன்மையை அறிவதற்காக கடலூர் நீதிமன்றத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அப்போது அந்த கடிதம் போலியான கடிதம் என்பதும், நீதிபதியின் கையெழுத்தை போலியாக போட்டு கடிதம் அனுப்பி இருப்பதும் தெரியவந்தது. இதன் பின்னர் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார், சுமல்பாபுவை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், அவர் கூறும் போது, தனது அஞ்சலக கணக்குகளை போலீசார் முடக்கி வைத்திருப்பதால் அதில் இருக்கும் பணத்தை எடுத்து ஆடம்பரமாக செலவு செய்ய முடியவில்லை. இது குறித்து பல முறை போலீசாருக்கு கடிதம் எழுதியும் கணக்கை விடுவிக்க மறுத்துவிட்டனர். எனவே, இணைய தளம் மூலம் போலியான நீதிமன்ற உத்தரவை தயார் செய்தேன்.
மேலும் ஸ்டாம்ப் மேக்கர் என்ற இணையதளம் மூலம் ரப்பர் ஸ்டாம்ப் வாங்கி அதில் முத்திரையிட்டு எனது கணக்கை விடுவிக்க வேண்டும் என்று கடிதமாக தயாரித்து போலீஸ் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தேன் என்று ஒப்புக் கொண்டார். இதையடுத்து கமல்பாபுவை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, போலி கடிதம் தயாரிக்க பயன் படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.