- கலைமகள் சபா பெயரில் உள்ள நிலங்களை உறுப்பினர்களுக்கு பகிர்ந்து அளிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ரிசீவராக நியமிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கலைமகள் சபா எனும் நிதி நிறுவனம் 5 லட்சத்து 33 ஆயிரத்து 356 உறுப்பினர்களிடம் பெற்ற முதலீடு மூலமாக தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 13 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களை வாங்கி ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டது.
இந்நிறுவனத்துக்கு எதிராக முறைகேடு புகார்கள் வந்ததையடுத்து இந்த நிர்வாகத்தை கவனிக்க சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கலைமகள் சபா நிர்வாகத்தை நிர்வகிக்க பதிவுத்துறையில் உதவி தலைமைப் பதிவாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை சிறப்பு அதிகாரியாக நியமிக்க தமிழக அரசின் வணிக வரித்துறை செயலருக்கு கடந்த 2021 நவம்பரில் உத்தரவிட்டு இருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து கோவையைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அதில், உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பி்த்து 2 ஆண்டுகள் கடந்தும் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை என்றும், உறுப்பினர்கள் பலர் 70 வயதை கடந்து விட்டதால், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து, நிலங்களை உறுப்பினர்களின் பெயர்களி்ல் பங்கிட்டு வழங்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ரிசீவராக நியமிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.
Leave a Reply
You must be logged in to post a comment.