வடசென்னை பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனை செய்த பாஜக நிர்வாகி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வடசென்னை பகுதிகளில் உள்ள கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க, நுண்ணறிவு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, போதை பொருள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கொருக்குப்பேட்டை நைனியப்பன் தெருவில் உள்ள ஒரு மளிகை கடையில், போதை பொருள் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், கொருக்குப்பேட்டை ஆய்வாளர் யுவராஜ் தலைமையில் போலீசார் நேற்று சம்பந்தப்பட்ட கடையில் சோதனை நடத்தினர்.
அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், மாவா, குட்கா உள்ளிட்டவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதை அடுத்து, கடை உரிமையாளரான கொருக்குப்பேட்டை கேசவ கிராமணி தெருவை சேர்ந்த பச்சையம்மாள் வயது (34), அவரது வீட்டில் சோதனை செய்த போது 25 கிலோ ஹான்ஸ், 2 கிலோ மாவா, 30 கிலோ ஜர்தா இருப்பது தெரிந்தது.
அவற்றை எல்லாம் பறிமுதல் செய்த போலீசார், பச்சையம்மாளை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில், கொருக்குப்பேட்டை கேசவ கிராமணி தெருவை சேர்ந்த ராயபுரம் பாஜக கிழக்கு மண்டல பொருளாளர் ராஜேந்திரன், லோகேஷ் வயது (29), நரேந்தர் வயது (24) ஆகியோரையும் கைது செய்தனர்.

இந்த விசாரணையில், பாஜக பிரமுகர் ராஜேந்திரன், வட சென்னை பகுதிகளில் உள்ள கடைகளுக்கு தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதற்கு உதவியாக செயல்பட்டது தெரியவந்தது. . இதையடுத்து, 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சத்தியா என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.