சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதியில் வாக்களிக்க காத்திருந்த மூதாட்டி ஒருவரும் அதேபோல் சேலம் மாநகராட்சி பள்ளியில் வாக்களிக்க காத்திருந்த முதியவர் ஒருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
சேலம் மக்களவைத் தேர்தலை ஒட்டி , சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 1,766 வாக்குச்சாவடிகளில் 4 ஆயிரத்து 264 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 2 ஆயிரத்து 132 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 2 ஆயிரத்து 307 வாக்கினை சரிபார்க்கும் கருவிகளும் (VVPAT) வாக்காளர் வசதிக்காக அமைக்கப்பட்டிருந்தது .
சேலம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மும்மரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டதால் வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள காலை முதலே முதியவர்கள் அதிக அளவில் வாக்களிக்க அவர்களது வாக்கு சாவடிகளில் குவிந்த வண்ணம் இருந்தனர் .

குறிப்பாக அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் , அவரவர்களது கட்சியின் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்ய முதியவர்களை வாக்கு சாவடிக்கு கொண்டு வருவதில் அதிகம் ஆர்வம் காட்டி வந்தனர் .
தேர்தல் ஆணையம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் சுலபமாக வாக்களிப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக சக்கர நாற்காலி மூலமாக வாக்குச்சாவடி மையத்திற்குள் அழைத்து சென்று முதியவர்கள் வாக்களித்த பிறகு வெளியே அழைத்து வரும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சேலத்தில் நடந்த சோகம் : இந்த நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி (65) என்பவர் வாக்களிக்க மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார். அப்போது திடீரென பழனிசாமிக்கு மயக்கம் ஏற்பட்டது அப்போது வாக்குச்சாவடி அருகே அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவர் உடனடியாக கொண்டு செல்லப்பட்டார் .

ஆனால் சிகிச்சை பலன் இன்றி பழனிச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார் அவருக்கு ஏற்கனவே இருதய நோய் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு சம்பவம் : இதேபோல் சேலம் ஆத்தூர் அடுத்துள்ள கங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொண்டையம் பள்ளியை சேர்ந்த சின்னபொண்ணு (77) வாக்களிக்க சென்றபோது வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் மூதாட்டி உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சேலத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்களிக்க வந்த இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.