நெய்வேலியில் உள்ள ஏ பிளாக் மாற்று குடியிருப்பு பகுதியை சேர்ந்த மோகன் மகன் கிஷோர் வயது (14). இவர் என்எல்சி பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் வில்லுடையான்பட்டு முருகன் கோயில் எதிரே உள்ள தெப்பக்குளத்தில் குளிக்க சென்றார்.
பின்னர் மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கிஷோரை இரவு முழுவதும் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இதை அடுத்து நேற்று காலை கிஷோர் முருகன் கோயில் தெப்பக்குளத்தில் பிணமாக மிதந்தார்.

இது குறித்து நெய்வேலி நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று பண்ருட்டியை அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சாமிவேல் – தமிழ் இவர்களது மகன் கிஷோர் வயது (9) இவன் அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தான்.
இந்திலையில் நேற்று முன்தினம் கூலி வேலைக்கு சென்ற இவனது தாய் தமிழ் மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீட்டில் விளையாடி கொண்டிருந்த மகனை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை.

அப்போது பண்ருட்டி போலீசார், சிறுவனை தேடி வந்தனர். இதற்கிடையில் நேற்று காலை கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, சிறுவன் வீட்டிலிருந்து மோப்பம் பிடித்து ஏரிபக்கம் ஓடி நின்றது.
இதனால் போலீசார் ஏரி கரையில் ஆய்வு செய்த போது, காணாமல் போன சிறுவனின் ஆடை அங்கு கிடந்தது. பின்னர் போலீசார் ஏரியில் தேடும் பணியை தீவிரப்படுத்தியதில், காணாமல் போன சிறுவனை ஏரியில் இருந்து பினமாக மீட்டனர்.

இதை அடுத்து போலீசார், சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவம்னைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிறுவன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் நடத்தினர்.

இதனால் பண்ருட்டி – பாலூர் ரோட்டில் போக்குவரத்து பாதித்தது. அப்போது பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி மற்றும் போலீசார் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதால் மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.