கோவை மாநகரில் கூடுதல் கட்டணம் வசூல் மற்றும் சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்டு வந்த 18 ஆம்னி பேருந்துகளை மத்திய வட்டார போக்குவரத்து கழக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக கோவையிலிருந்து சென்னை, பெங்களூரு மற்றும் தென் மாவட்டங்களுக்கு ஏராளமான பொதுமக்கள் செல்கின்றனர்.சாதாரண நாட்களை விட பண்டிகை போன்ற விடுமுறை நாட்களில் கொள்ளை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிகமான கட்டணம் பொதுமக்களிடம் 2 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 6 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

மக்கள் அனைவரும் அரசு பேருந்துகளை நாடுகின்றனர். அரசு பேருந்துகளில் டிக்கெட் புல் ஆகியுள்ளதால் தனியார் பேருந்தில் செல்வதற்காக வருகின்றனர். ஆனால் தனியார் பேருந்துகளில் கட்டணம் அதிகப்படியாக உள்ளது. வேறு வழியில்லாமல் டிக்கெட் புக் செய்து செல்கின்றனர். இந்நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் மத்திய வட்டாரப் போக்குவரத்து கழக அதிகாரிகள் கடந்த மூன்று நாட்களாக மாநகரில் பல்வேறு பகுதிகளில் சோதனை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வது மற்றும் சாலை வரி கட்டாத 18 ஆம்னி பேருந்துகளை மத்திய வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து பேருந்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.தற்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மத்திய வட்டாரப் போக்குவரத்து கழக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதே போல் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் சம்பந்தப்பட்ட தனியார் பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.