மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 486 வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி 17 மாதங்கள் ஆகிய பின்னும், நீதிமன்ற ஆணைப்படி மாற்று இடம் வழங்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை, எளிய இஸ்லாமிய சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 2000 பேர் குடும்பத்துடன் வீடு கட்டி வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் அவர்களை அப்புறப்படுத்த, நோட்டிஸ் அனுப்பியதையடுத்து, இந்த விடியா திமுக அரசு, குடியிருப்புகளுக்கான மாற்று இடத்தை அவர்கள் வசம் ஒப்படைக்காமல், திடீரென்று 21.6.2022 அன்று அங்கிருந்த 487 வீடுகளையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டனர் என்று அம்மக்கள் தெரிவித்தனர்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த வீட்டில் குடியிருந்து வந்த ஏழை, எளிய இஸ்லாமியர்கள், வீடுகள் இடிக்கப்பட்டு சுமார் 17 மாதங்கள் முடிவடைந்த நிலையிலும், இதுவரை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாற்று இடத்தை முறையாக கையகப்படுத்தி, தங்கள் வசம் இந்த விடியா திமுக அரசு ஒப்படைக்கவில்லை என்றும், இதனால், மழைக் காலங்களில் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி நிர்கதியாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் அகதிகளாக வாழ்ந்து வருவதாகவும், மிகுந்த மன உளைச்சலுடன் தெரிவித்தனர்.

எனவே, பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய இஸ்லாமியர்கள் குடியிருப்பதற்கான மாற்று இடத்தை உடனடியாக ஆர்ஜிதம் செய்து, வீடு கட்ட போதிய கடன் வசதி ஏற்பாடு செய்துதர வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.